×

பயிர் செய்யும் நிலத்தில் மாடுகளை ஏவி அராஜகம்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு

 

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த காக்கவாக்கம் காலனியை சேர்ந்த விவசாயிகள் முனுசாமி, ஆறுமுகம், நந்தன், அல்லிமுத்து, காளிதாஸ், ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வறுமை கோட்டிற்கு கீழ் கூலி தொழில் செய்து வரும் நாங்கள் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு ஏரியின் கீழ் அடிவாரத்தில் மேடு பள்ளங்களோடு முட்புதர்கள் முளைத்து பயனற்று கிடந்த இடத்தை காக்கவாக்கம் காலனி பகுதியை சேர்ந்த சுமார் 30 குடும்பத்தினர் சுத்தம் செய்தோம்.

அங்கிருந்த பள்ளம் மற்றும் முட்புதர்களை அகற்றி சமன் செய்து சுமார் 40 ஆண்டு காலமாக பயிர் செய்து ஜீவனம் நடத்தி வருகிறோம். தற்போது காக்கவாக்கம் கிராமத்தை சேர்ந்த சிலர் நாங்கள் பயிரிட்ட பயிர்களில் மாட்டை விட்டு மேயவிட்டு சேதம் ஏற்படுத்துகின்றனர். இது குறித்து கேட்டால் தகராறு செய்கின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். மேலும் இதனால் இரு தரப்பினருக்குமிடையே கலவரம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே எங்களது வாழ்வாதாரமாக உள்ள அரசு நிலத்தில் பயிர் செய்து பிழைப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகார் மனுவில் கூறியிருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post பயிர் செய்யும் நிலத்தில் மாடுகளை ஏவி அராஜகம்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Kakkavakkam Colony ,Oothukottai ,Munusamy ,Arumugam ,Nandan ,Allimuthu ,Kalidas ,Ekambaram ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...